சென்னை: விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டி புதூர் பகுதி பொம்மி பட்டாசு தொழிற்சாலையில் நேற்று(ஜன.29) வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஆறுமுகம், குபேந்திரன் ஆகிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து நிவாரண உதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் நாட்டார்மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஆறுமுகம், குபேந்திரன் ஆகியோர் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
![நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14323535_stat.jpg)
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் காயமுற்ற தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் அவர்களுக்கு ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியான பின், குபேந்திரன் உயிரிழந்துள்ளார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு